கரூர் மாவட்டம் குளித்தலையில், வருவாய்த்துறை உதவியாளரை கிராம நிர்வாக அலுவலர் (V.A.O) ஒருவர் ஆபாச வார்த்தைகளால் மிகக் கொடூரமாக திட்டி மிரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1-ம் தேதி குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை டவுன் வி.ஏ.ஓ அழகர் என்பவர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்துள்ளார்.
அப்போது, அங்கு பணிபுரியும் வருவாய்த்துறை உதவியாளர் ஒருவருக்கு போன் செய்த வி.ஏ.ஓ அழகர், “டேய் எங்கடா இருக்க?” என்று தொடங்கி, கேட்க முடியாத அளவிற்கு மிக மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.
”பிணத்துக்கிட்டே உட்கார்ந்திரு 10 மாசம் சம்பளம் வாங்க மாட்ட… உனக்கு என்ன வேலை? என்ன தாசில்தார் வேலை பாக்குறியா? உடனே வந்து அந்த பிணத்துக்கிட்டே உட்கார்ந்திருக்கணும். சாயங்காலம் வரைக்கும் உனக்கு அதான் வேலை” என்று அதிகார தோரணையில் மிகக் கேவலமாக மிரட்டியுள்ளார்.
இந்த உரையாடல் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. தற்போது வதியம் பகுதியில் பணியாற்றி வரும் வி.ஏ.ஓ அழகர் மீது உடனடியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் குவிந்து வருகின்றன.
குளித்தலை பகுதியில் சில வி.ஏ.ஓ-க்கள் மற்றும் உயர் அதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களை தொடர்ந்து இதுபோன்று ஆபாசமாக பேசுவதும், மனிதநேயமற்ற முறையில் நடத்துவதும் வாடிக்கையாக உள்ளதாக அப்பகுதி ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
