முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகளால் இதுவரை இல்லாத அளவில் குறைந்த எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
வழக்கமாக மாநகராட்சி மாதாந்திர மன்றக் கூட்டத்தின்போது 80 முதல் 160 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால் கடந்த மே மாதக் கூட்டத்தில் 37 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
ஆனால் இன்று நடைபெறும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 19 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட உள்ளது.
மேயர் பிரியா பொறுப்பேற்ற பின் முதல்முறையாக குறைந்த அளவிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளதால் இம்மாதமாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
