சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு வேட்பாளராக, தலைவராக இருப்பவர் தவெக தலைவர் விஜய். அவர் இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதற்காக நேற்றிரவு தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்த விஜய், இன்று அதிகாலை அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பட்டு வேஷ்டி, சட்டையில் மூலவர் சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதுடன், வேல் ஒன்றும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோயில் வளாகத்தில் திரண்டு, அவரை காண முண்டியடித்துக் கொண்டனர். பிறகு தனது தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் விஜய்.
