தமிழ்நாடு காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்வது பற்றி தேசிய தலைமை தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றது. இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு விஷயங்களில் திமுக, காங்கிரஸ் இடையே சுமூகமான சூழல் ஏற்படவில்லை என பரவலாக பேசப்பட்டது.  கடைசிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தநிலையில், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நீண்ட காலம் கட்சிப் பணியில் இருப்பவர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்காக பணி செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், செல்வப்பெருந்தகையின் முடிவை காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் தேசியத் தலைமை தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மே 4ம் தேதி வெளியாகும் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

ஏற்கனவே தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்களும், புதியவர்களின் பெயர்களும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், புதிய நபருக்கு தலைவர் பதவியை வழங்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version