தவெக தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனம் திறந்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோரியிருக்கிறது.
இதில் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார்.
மொத்தம் 112 ஆதரவு கடிதங்கள் மட்டுமே இருந்ததால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கோரியதாக தகவல் வெளியானது.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைக்காததால் விஜயின் பதவியேற்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போகிறது.
இதனிடையே அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிப்பதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என கூறியிருக்கிறார்.
மேலும் திமுக அரசு செயல்படுத்தியுள்ள ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் விஜய் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் சந்தேகம் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
