சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது, ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல காவல்துறை திடீர் தடை விதித்துள்ளது.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் கொண்டு வந்த விசில்கள் நுழைவு வாயிலிலேயே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசில்களை விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்தத் தடையின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் சமீபத்தில் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இச்சின்னம் மக்கள் மத்தியில் பிரபலமாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, சேப்பாக்கம் மைதானம் அமைந்துள்ள தொகுதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடையது என்பதால், இந்த விவகாரம் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), பிசிசிஐ (BCCI) அல்லது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) தாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளன.
அதே சமயம், ஐசிசி தொடர்களில் வீரர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் என்பதால் இசைக்கருவிகளுக்குத் தடை விதிப்பது வழக்கமான ஒன்றுதான் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும், சென்னை மாநகர காவல் துறை தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.
“விசில் போடு” என்பதைத் தனது அடையாளமாகக் கொண்ட சென்னை ரசிகர்களுக்கு, தங்களின் சொந்த மைதானத்திலேயே விசில் அடிக்கத் தடை விதிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. “விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் அரசியலைப் புகுத்துவது முறையல்ல” என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
