தமிழக சட்டப்பேரவையில் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஒன்று நடைபெற்றது. தவெக தலைமையிலான புதிய அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. அதேசமயம் மாநிலத்தின் கடுமையான கடன் சுமை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவை அரசுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, நிதிநிலையின் உண்மையான பரிமாணத்தை வெளிப்படுத்தியது. பட்ஜெட்டிற்கு வெளியே உள்ள கடன்கள், அரசு உத்தரவாதங்கள் மற்றும் பிற பொறுப்புகள் உள்ளிட்ட மொத்தக் கடன் சுமை சுமார் ₹13.18 லட்சம் கோடியாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இதில் நேரடிக் கடன் மட்டும் கிட்டத்தட்ட ₹10 லட்சம் கோடியை நெருங்குகிறது.

2021ஆம் ஆண்டில் ₹4.8 முதல் ₹5.1 லட்சம் கோடியாக இருந்த கடன், ஐந்தாண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் கடன் வரம்புகள் மற்றும் மின் துறை சீர்திருத்த நிபந்தனைகளின் கீழ், 2026-27 நிதியாண்டில் தமிழ்நாடு சுமார் ₹1.52 லட்சம் கோடிக்கு மேல் கடன் பெற முடியாது. இதனால் சுமார் ₹11,600 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 நிதியுதவி, இளைஞர்களுக்கான உதவித் திட்டங்கள், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவற்றை முழுமையாகச் செயல்படுத்துவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. வருவாயை அதிகரிப்பதோ அல்லது செலவுகளை மறுசீரமைப்பதோ அவசியம் என நிதி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிதியமைச்சர் மரிய வில்சன் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். 2011 முதல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஜெப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக இயக்குநராகவும், ஜெப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் பணியாற்றினார். முன்னதாக ஜெப்பியார் பொறியியல் கல்லூரி மற்றும் சர்வதேச பள்ளியின் நிறுவனர்-இயக்குநராகவும், JIT குளோபல் இன்ஃபோசிஸ்டம் மற்றும் விளையாட்டு அகாடமியின் இயக்குநராகவும் இருந்தார்.

விஜய் தவெகவைத் தொடங்கியபோது, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி கே.ஜி. அருண்ராஜ், முன்னாள் நீதிபதி சி. சுபாஷ் உள்ளிட்டோருடன் அக்கட்சியில் இணைந்தார். 1989ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட கர்னல் டாக்டர் ஜெப்பியாருக்குப் பிறகு, குடும்பம் 35 ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகியிருந்தது. இப்போது மரிய வில்சன் தவெகவின் முக்கிய இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். 2025 செப்டம்பரில் கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம் ஜெப்பியார் கல்லூரியில் நடைபெற்றபோது, அதை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version