இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரமான திருப்பூரின் ஜவுளித்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் மரிய வில்சன், திருப்பூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்’ அமைக்கப்படும் என்றும், இதற்கு முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

இதனுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்தித் திட்டமும் ஊக்குவிக்கப்படும். திருப்பூர் ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. ஏற்றுமதி மூலம் மட்டும் சுமார் 40 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டப்படுகிறது. சமீபத்திய ஆண்டில் பின்னலாடை ஏற்றுமதி ரூ.46 ஆயிரம் கோடியைத் தாண்டியதாகத் தொழில் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் பருத்தி விலை உயர்வு, செயற்கை இழைகளுக்கான சார்பு ஆகியவை உற்பத்திச் செலவை அதிகரித்து, உள்நாட்டு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சர்வதேச ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி திரும்பியதால், தொழில்துறை மீண்டு வரத் தொடங்கியது. இந்தச் சூழலில் வெளியான அரசின் அறிவிப்பு தொழிலதிபர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தொழில்நுட்ப மையம், ஆராய்ச்சி, பயிற்சி, நவீன இயந்திரங்கள் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும். பசுமை ஆடை உற்பத்தியில் கழிவுநீர் மறுசுழற்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத முறைகள் ஆகியவற்றிற்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

உலகச் சந்தையில் சுற்றுச்சூழல் நட்பு ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில், இந்தத் திட்டம் திருப்பூரின் போட்டித்தன்மையை உயர்த்தி, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் திருப்பூர், இந்த முயற்சிகள் மூலம் மேலும் வலுப்பெறும் என்பது தொழில்துறையினரின் நம்பிக்கை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version