பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அப்படி படையே நடுங்கும் பாம்புகளின் பாதுகாப்பையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் விதமாக ஜூலை 16 அன்று உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் கிட்டத்தட்ட 3500க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் 351 வகையான பாம்புகள் காணப்படுவதாகவும் அவற்றில் 141 பாம்புகள் தமிழ்நாட்டு பகுதிகளில் காணப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் 62 வகையான பாம்புகள் நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளன. கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, சுருட்டை விரியன், கட்டு விரியான் ஆகிய 4 வகையான பாம்புகள்தான் இந்தியாவில் மனித இறப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

உலகின் மிகச்சிறிய பாம்பு பார்படாஸ் நூல் பாம்பு ஆகும். இந்தப் பாம்பு, சுமார் 4 அங்குல நீளத்தில், ஒரு மண்புழுவை விடச் சிறியது. மிக நீளமான பாம்பு வலைப்பின்னல் மலைப்பாம்பு, மற்றும் மிகக் கனமானது பச்சை அனகோண்டா.

பாம்புகள் தங்கள் தலையின் விட்டத்தை விட மூன்று மடங்கு பெரிய இரையை விழுங்குவதற்கு ஏதுவாக, அவற்றின் மேல் மற்றும் கீழ் தாடைகள் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன.

பாம்புகள் தங்கள் இரையை முழுதாக விழுங்கிவிடும்.

பெரும்பாலான பாம்புகள் இரவு நேரங்களில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும்.

அவற்றின் நாக்கு காற்றை நுகரப் பயன்படுகிறது.

பாம்புகள் குளிர் இரத்த விலங்குகள், அல்லது புறவெப்ப உயிரினங்கள் ஆகும். அவை தங்கள் உடல் வெப்பநிலையைச் சீராக்க சூரிய ஒளியில் குளிக்க வேண்டும்.

பெரும்பாலான பாம்புகள் முட்டையிடும். அதேவேளையில், சில பாம்புகள் குட்டி ஈனுகின்றன.

உயிரிழப்புகளையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தினாலும் பாம்புகள் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேண உதவுகின்றன. எலிகள் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்வதன் மூலம் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பாம்புகளின் இந்த செயல் விவசாயத்திற்கு உதவுகின்றது.

மேலும் கட்டிகளுக்கு எதிரான சிகிச்சைகள் முதல் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வரை, பாம்பு விஷம் பல ஆண்டுகளாக மருத்துவ நோக்கங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கடவுளின் அவதாரமாகவும் பாம்புகள் பார்க்கப்படுவதால் அதற்கு பால் ஊட்டப்படுகின்றன. ஆனால் பாம்புகள் பால் குடிப்பதில்லை என்பது அறிவியலாளர்கள் கருத்து!

யாரையும் தீண்டாத பாம்பின் விஷம்தான், மாணிக்கக் கல்லாக மாறுவதாகவும், அந்த மாணிக்கக் கல் ஒருவரிடம் இருந்தால் அவரது வாழ்வு முழுவதும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதும் மனிதர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தான் தீண்டியவரின் உடல் புதைக்க அல்ல எரிக்கச் செய்யப்படுகிறதா என்று பச்சைப் பாம்பு பின் தொடர்ந்து பார்வையிடும் எனவும் கிராமங்களில் இன்று கருத்து நிலவி வருகிறது.

மண்ணுளி பாம்பு கோடிக்கணக்கில் செல்வதாக அதை வைத்து மோசடிகளும் நடைபெற்று வருகிறது.

உலகப் பாம்புகள் தினத்தில் நமக்கு தெரிந்த பாம்புகள் குறித்து ஒருகணம் சிந்தித்துக் கொள்வோம்.

-எம். ஆசாத்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version