தூத்துக்குடியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் 25க்கும் மேற்பட்ட யோகாசனம் மற்றும் 12 நிமிடங்கள் தொடர்ச்சியாக பத்மாசனம் செய்து உலக சாதனை நிகழ்த்தினர்.

உலக யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள 12வது உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி நகரில் உள்ள ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சூரிய நமஸ்காரம், பத்மாசனம், வஜ்ராசனம், மச்சாசனம், விருச்சிகாசனம், கடாசனம், அர்த்த கடி சக்கராசனம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை மாணவிகள் ஒழுங்காகவும் ஒருமைப்பாட்டுடனும் செய்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து உலக யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு முயற்சியாக, மாணவிகள் அனைவரும் சுமார் 12 நிமிடங்கள் தொடர்ந்து பத்மாசனத்தில் அமர்ந்து சாதனை நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு உலக யோகா தின விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையிலும், யோகாவின் உடல் மற்றும் மனநல நன்மைகளை எடுத்துரைக்கும் வகையிலும் அமைந்தது.

நிகழ்ச்சியில் சைன் யோகா அமைப்பின் சார்பில் இயற்கை மருத்துவரும் யோகா சாதனையாளருமான கனிஷ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தார். மேலும் யோகாவின் சிறப்புகள் குறித்து விளக்கமளித்த அவர், தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார மரபுகளுடன் இணைந்துள்ள யோகக்கலை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

யோகாசனங்களை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்றும், மன அழுத்தம் குறைந்து மன ஒருமைப்பாடு மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக மாணவர்கள் யோகாசனங்களை தினசரி பழக்கமாகக் கொண்டால் கல்வியில் கவனம் அதிகரித்து சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும் எனவும் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள், யோகாசனம் உடல்நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்துவதோடு தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவுகிறது என்று தெரிவித்தனர். உலக யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version