தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு (மே 24 மற்றும் 25) 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட 19 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை.
மே 26-ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதேசமயம், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 24 முதல் 27-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
