பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்த நண்பர்களான பத்ரிஸ் (32) மற்றும் முருகன் (27) ஆகிய இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேதாரண்யத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்தும், இவர்களது இருசக்கர வாகனமும் பூவைத்தேடி அருகே நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் பத்ரிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழையூர் காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த முருகனை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முருகன், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படும் முன் சாலையில் மது போதையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் நிலைத்தடுமாறி சென்ற காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
