கர்நாடக காங்கிரஸில் முதலமைச்சர் பதவி விவகாரம் தொடர்பாக இன்று இருதலைவர்களும் டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளனர்

கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியைப் பிடிக்கச் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரிடமும் தலைமை பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராகவும் பதவியைப் பகிர்ந்து கொள்ள ‘ஒரு ரகசிய ஒப்பந்தம்’ போடப்பட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், காங்கிரஸ் மேலிடம் இதை வெளிப்படையாக ஒருபோதும் அறிவிக்கவில்லை. இந்தசூழலில் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுக் காலம் நவம்பரில் முடிவடைந்தது.

இதையடுத்து, ‘ரகசிய ஒப்பந்தத்தை மதித்து, டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும்’ என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் இருதரப்பு தலைவர்களுக்கு இடையே, கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பஞ்சாயத்தில் ஏற்கனவே தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனவும் கூறியிருந்தனர். இந்தநிலையில் இன்று இருவரும் டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளனர். இதன் மூலம் கர்நாடக காங்கிரஸில் நிலவிவரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version