பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. பின்னர், இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகள் மேற்கொண்டது. அவற்றை தடுத்து நிறுத்தி, இந்திய படைகள் தாக்கி அழித்தன. இதன் பின்னர், அமெரிக்கா தலையீடு செய்ததால் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: ராகுல் அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒருமனதாக வேண்டுகோள் விடுக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பால் முதலில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் குறித்து மக்களுக்காக எம்.பி.க்கள் விவாதிக்க வேண்டியது முக்கியம். நாம் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு, நாம் இணைந்து தீர்வு காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் உடனடியாக பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிக்க: எல்லையில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை அதிகாரி.. 7 வீரர்கள் காயம்!
மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சூழலில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்கா முதலில் அறிவித்த போர் நிறுத்தம் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அதே வேண்டுகோளுக்காக நானும் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்” என்று கூறியுள்ளார்.