இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை நம்பியிருக்கும் நிலையில், பயணிகளின் வசதி மற்றும் அமைதியான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வே முக்கியமான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது இரவு 10 மணி விதி ஆகும். இந்த விதியின் நோக்கம், நீண்ட தூரம் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இரவில் போதுமான மற்றும் நிம்மதியான உறக்கத்தைப் பெறுவதை உறுதி செய்வதே ஆகும்.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, ரயில் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்குப் பிறகு சக பயணிகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படாது.
குறிப்பாக, பயணிகள் தங்கள் செல்போன்களில் ரீல்ஸ் பார்ப்பது அல்லது அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், பயணத்தின் போது சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த விதிகளை மீறி, யாரேனும் அதிக சத்தமாகப் பேசுவதன் மூலமோ, சத்தம் எழுப்புவதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் வகையில் சகப் பயணிகளுக்குத் தொந்தரவு அளித்தால், அது குற்றமாக கருதப்படும்.
ரயில்வே சட்டம், 1989-ன் பிரிவு 145-ன் கீழ், தொந்தரவு ஏற்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமீறலுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். அபராதம் விதிக்கும் முன், ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு முதலில் எச்சரிக்கை வழங்குவார்கள்.
மேலும், இரவு 10 மணிக்கு மேல், ஹெட்போன் பயன்படுத்தாமல், இசை கேட்பது அல்லது வீடியோ பார்ப்பது சட்டப்படி தவறு என்று ரயில்வே அறிவித்துள்ளது. இந்தச் செயலால் மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்பட்டால், ரயில்வே சட்டம் (பிரிவு 145)ன் கீழ் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இரவு 10 மணிக்கு மேல், அவசர கால விளக்குகள் (Night Lights) தவிர, ரயிலில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளை மீறும் நபர்கள் மீது ரயில்வே ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
