இந்தியாவில் மிக விரைவில் ஒரு பெரிய “பொருளாதாரப் புயல்” வீசப்போகிறது என்றும், இதனால் சாமானிய மக்களும் சிறு வணிகர்களுமே கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மேலும், இந்த நெருக்கடியால் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்கள் அம்பானி மற்றும் அதானி ஆகியோர் எந்தப் பாதிப்பும் அடைய மாட்டார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, அங்கு ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் நிதி சார்ந்த கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்த அவர், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு உழைக்கும் வர்க்கத்தினரை விடுத்து, ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு சாதகமாகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புயல் நம்மை நெருங்கி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் மோடிஜி உருவாக்கிய கட்டமைப்பு அதானி மற்றும் அம்பானிக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. தற்போது அந்த கட்டமைப்பே சரிவின் விளிம்பில் உள்ளது. இதன் தாக்கம் அவர்களைப் பாதிக்காது, தப்பித்துக் கொள்ள அவர்களிடம் வழிகள் உள்ளன.

ஆனால், இதன் உண்மையான பாதிப்பு இளைஞர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீதே விழப்போகிறது. இவர்கள் யாரும் அந்தப் பொருளாதாரக் கட்டமைப்பின் பலனைப் பெற்றவர்கள் அல்ல. உங்களைச் சுற்றிப் பாருங்கள், நீங்கள் அந்தப் பலனைப் பெற்ற கட்டமைப்பில் இருக்கிறீர்களா அல்லது வரவிருக்கும் புயலால் பாதிக்கப்படப் போகிறீர்களா என்று உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.”

மேலும் அவர் கூறுகையில் “மோடிஜியால் மாற்றியமைக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு ஒரு பெரிய நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று நான் பல நாட்களாக எச்சரித்து வருகிறேன். அம்பானிக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு நீடிக்காது, அது முற்றிலும் சரிவது உறுதி. இதில் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், சாமானிய மக்களே இதன் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும். அவர்கள் (தொழிலதிபர்கள்) தங்களது அரண்மனைகளில் சுகமாக வாழ்வார்கள், ஆனால் உத்தரப் பிரதேசத்து இளைஞர்களும் மக்களும்தான் இந்த அதிர்ச்சியை முழுமையாக எதிர்கொள்ளப் போகிறார்கள்.

வரவிருக்கும் பொருளாதார நெருக்கடி அதானி, அம்பானி அல்லது மோடியைப் பாதிக்காது. அது உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு மிகக் கடினமான காலம் வரவிருக்கிறது. இதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நரேந்திர மோடி மக்களை வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு, அவரோ உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்” என்று ராகுல் காந்தி சாடினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version