டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் இன்று  விடுவித்துள்ளது. . சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

“நான் ஊழல்வாதி அல்ல. கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் உண்மையான நேர்மையாளர்கள் என்பதை இன்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் நான் சம்பாதித்தது நேர்மை மட்டுமே. அந்த நேர்மையைச் சிதைக்க மிகப்பெரிய சதி நடந்தது. இறுதியில் உண்மை வென்றுள்ளது,” என்று அவர் கூறினார். அப்போது அருகிலிருந்த மணீஷ் சிசோடியா அவரைத் தேற்றினார்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதற்காகத் தீட்டப்பட்ட மிகப்பெரிய அரசியல் சதி இது என கெஜ்ரிவால் விமர்சித்தார். “பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இணைந்து எங்களைச் சிறையில் தள்ளினர். ஒரு முதலமைச்சரை வீட்டிலிருந்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்தது முன்னெப்போதும் நடக்காத ஒன்று,” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில், “இந்த உலகில் எவ்வளவு சக்தி படைத்தவராக இருந்தாலும் சிவ சக்திக்கு மேலானவர் அல்ல. இறுதியில் உண்மை எப்போதும் வெல்லும்,” எனத் தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

வழக்கு பின்னணி: டெல்லி அரசு தனது வருவாயை அதிகரிக்கவும், மதுபான விற்பனையில் இருந்த அரசு ஏகபோகத்தை ஒழித்து தனியாருக்கு வாய்ப்பளிக்கவும் ‘மதுபானக் கொள்கை 2021-22’-ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 கடைகளுக்குத் தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது.

இந்தப் புதிய கொள்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக விதிகள் மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அதாவது, மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது. டெல்லி தலைமைச் செயலாளர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தார்.

இதை தொடர்ந்து கடந்த 2023 பிப்ரவரியில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை அனுப்பிய 9 சம்மன்களைத் தவிர்த்த நிலையில்,  கடந்த 2024 மார்ச் 21 அன்று டெல்லி முதலமைச்சராக இருந்தபோதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே பதவியில் இருந்தபோது கைது செய்யப்பட்ட முதல் முதல்வர் இவராவார். தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் பி.ஆர்.எஸ் தலைவருமான கே.கவிதாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மதுபான உரிமம் பெற ‘சவுத் குரூப்’ என்ற அமைப்பிடமிருந்து 100 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டு, அந்தப் பணம் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகச் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வாதிட்டன. நீண்ட விசாரணைக்குப் பிறகு, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக எந்த ஒரு திட்டவட்டமான ஆதாரமும் இல்லை என நீதிபதி ஜித்தேந்திர சிங் குறிப்பிட்டார். “இந்த வழக்கு முழுவதும் வெறும் ஊகங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று கூறி 23 பேரையும் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version