பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றார்.
கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம், பா.ம.க-வுக்கு மாம்பழச் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதம் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் முகவரிக்கு அனுப்பப்படாமல், அன்புமணியின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்தும், அந்தக் கடிதத்தை ரத்து செய்யக் கோரியும் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ராமதாஸ் தரப்பில் “கட்சியின் உறுப்பினராகவே இல்லாத முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸின் முகவரிக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது சட்டப்படி தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதேபோல், அன்புமணி தரப்பில், கட்சி எனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கில் என்னையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாகத் ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

ராமதாஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version