பிரபல தமிழ் நடிகை வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ஒரு காலத்தில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு இணையாக கருதப்பட்ட முன்னணி நடிகர் திலீப். பாடகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். மலையாள ரசிகர்களால் ‘ஜனப்பிரிய நாயகன்’ என்று அழைக்கப்பட்டவர் திலீப். இந்தச் சூழலில்தான், பிரபல மலையாளம், தமிழ் நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யவும் பல்சர் சுனில் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார். அன்றைய தினமே அந்த நடிகை போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மற்றும் இந்த விவகாரம் தொடர்புடைய சர்ச்சைகளால் திலீப்பின் கரியரும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
குற்றச் சதி, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டது. ஐடி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் திலீப் தான் இந்த வன்கொடுமையைத் திட்டமிட்டே நடத்தியதாகக் கூறப்பட்டது.. அவருக்கும் அந்த நடிகைக்கும் முன்கூட்டியே பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே திலீப் இதைத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது
கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், நடிகை தொடர்ந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாத்தால் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் நடிகையின் கார் டிரைவர் அந்தோணி உள்பட குற்றம்சாட்டப்பட்ட A1 – A6 ஆகியோர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
