இந்தியாவில் இயற்கை பேரிடர்களைக் கையாள்வதிலும், வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதிலும் ஒரு புதிய புரட்சியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் புயல், கனமழை போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்பே துல்லியமாகத் தெரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மக்களவையில் வானிலை முன்னறிவிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது, புயல்களின் தீவிரத்தைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு  மற்றும் இயந்திரக் கற்றல் அடிப்படையிலான ‘Advanced Dvorak Technique’ (AiDT) பயன்படுத்தப்படுகிறது. Arunika’ சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் Pangu, GraphCast போன்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறுகிய காலத்தில் கனமழை மற்றும் வெப்ப அலைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட பகுதிகளில் மழைப்பொழிவை துல்லியத்துடன் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது.

பாஷினி AI கருவி மூலம் வானிலை தகவல்கள் விவசாயிகளுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் இணைந்து, இந்தியாவின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு வழங்கப்படுகிறது. இதனை ‘e-Gramswaraj’ மற்றும் ‘Mausamgram’ இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

‘மேக்தூத்’ மற்றும் ‘மவுசம்’ போன்ற மொபைல் செயலிகள் மூலம் 1.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நேரடி வானிலை தகவல்களைப் பெற்று வருகின்றனர்.

இந்த நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் பயிர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்த முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுக்க முடிகிறது. இது பயிர் சேதத்தைக் குறைப்பதுடன், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் பெரிதும் உதவும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version