ஹைதராபாத்திலிருந்து தாய்லாந்தின் புக்கெட் தீவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் சுற்றுலாத் தலமான புக்கெட் தீவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 938) இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் 135 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 141 பேர் இருந்தனர். விமானம் புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதன் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையை விட்டுச் சற்று விலகிச் சென்று நின்றது.

டயர் வெடித்த வேகத்தில் விமானத்தின் முன்பக்கத் தரையிறங்கும் பகுதி  கடுமையாகச் சேதமடைந்தது. விமானம் தடம் விலகியதை கண்டு உள்ளே இருந்த பயணிகள் அலறினர். இருப்பினும், விமானிகளின் சாதுரியமான செயல்பாட்டினால் விமானம் கவிழாமல் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. உடனடியாக அவசரகால வழிகள் வழியாகப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக புக்கெட் சர்வதேச விமான நிலையத்தின் ஒரே ஒரு ஓடுபாதை  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து புறப்பட வேண்டிய மற்றும் அங்கு தரையிறங்க வேண்டிய ஏராளமான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது அருகில் உள்ள விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானத்தை ஓடுபாதையிலிருந்து அகற்றும் பணியில் தாய்லாந்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version