புகெட்டிலிருந்து(Phuket) டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ஏற்பட்ட கடுமையான வானிலை மாற்றத்தால் நடுவானில் சுமார் 300 அடி ஆழத்திற்கு திடீரென கீழே சரிந்தது. இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் எனப் பலர் காயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இன்று புகெட்டிலிருந்து டெல்லிக்குப் பறந்த AI2379 என்ற ஏர் இந்தியா விமானம், வழக்கமான பயணத்தின்போது எதிர்பாராதவிதமாகச் கடுமையான காற்றுச் சுழலில் சிக்கியதாக விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஃப்ளைட் ரடார் 24’ தரவுகளின்படி, விமானம் திடீரென ஏற்பட்ட கீழ்நோக்கிய காற்றழுத்தம் காரணமாக 300 அடி உயரம் வரை கீழே இறங்கியுள்ளது.
புகெட்டிலிருந்து காலை 8:25 மணிக்குக் கிளம்பிய இந்த விமானம், திட்டமிட்டபடி காலை 11:50 மணிக்கு டெல்லியில் பத்திரமாகத் தரையிறங்கியது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.
https://x.com/ANI/status/2084556278526087431?
விமானத்தில் பயணம் செய்த பலருக்குச் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா கூறியிருந்தது. இருப்பினும், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த சில காட்சிகளில் நிலைமை தீவிரமாக இருந்தது தெரியவந்துள்ளது. ஏஎன்ஐ வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளின்படி, முகத்தில் காயமடைந்த ஆண் பயணி ஒருவர் தலையிலும் முகத்திலும் கட்டுகளுடன் ஆம்புலன்ஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், கழுத்தில் காலர் அணிந்தவாறு ஏர் இந்தியா பெண் பணியாளர் ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான நிலைய மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்கினர். விமானப் பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமை என்றும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் விமான நிறுவனம் வழங்கி வருவதுடன், இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து முழுமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

