மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 206 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக இந்த மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சுவேந்து அதிகாரி, மாநில முன்னாள் தலைவர் திலீப் கோஷ் மற்றும் சமித் பட்டாச்சார்யா ஆகியோர் முன்னிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணை முதலமைச்சராக நியமிக்க பாஜக மேலிடம் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு பெண்ணை முதலமைச்சராக அமர்த்தப் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாநில அளவில் மிகவும் பிரபலமான அக்னிமித்ரா பால் மற்றும் ரூபா கங்குலி ஆகியோரின் பெயர்கள் முதலமைச்சர் ரேஸில் பலமாக அடிபடுகின்றன. மேற்குவங்கத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பெண் முதலமைச்சரை நியமிப்பதன் மூலம், பெண்களின் ஆதரவைத் தக்கவைக்கவும், அகில இந்திய அளவில் கட்சியின் பிம்பத்தை உயர்த்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்க, சுவேந்து அதிகாரி மற்றும் சமித் பட்டாச்சார்யா ஆகியோரை டெல்லியில் தங்கியிருக்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் உள்ளிட்டோர் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, மேற்குவங்கத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. மம்தா பானர்ஜியின் கோட்டையைத் தகர்த்துள்ள பாஜக, வரும் மே 9-ம் தேதி (ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்) அன்று புதிய அரசு பதவியேற்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version