கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில், இரண்டு யானைகள் திடீரென சண்டையிட்டுக் கொண்டதில், சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த ஜின்மு என்ற ஜுனேஷ்(33) என்ற பெண், குடகு பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். சம்பவத்தன்று, துபாரே முகாமில் உள்ள ஆற்றில் யானைகள் குளிப்பதை அவர் மற்ற சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த ‘கஞ்சன்’ என்ற யானை, ‘மார்த்தாண்டா’ என்ற மற்றொரு யானையை திடீரென  முட்டித் தள்ளி சண்டையிட்டது.

https://x.com/ndtv/status/2056303329509335115?

யானைகளின் இந்தத் திடீர் மோதலால் நிலைகுலைந்த மார்த்தாண்டா யானை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜுனேஷ் மீது சாய்ந்து விழுந்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர், ஒரு யானையின் அடியில் சிக்கியதோடு, மற்றொரு யானை மிதித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தன. இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்த பிற சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக வனம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் பி காந்த்ரே, அப்பெண்ணின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். வனவிலங்குகளைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்துமாறு காந்த்ரே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வளர்ப்பு யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் நடத்தையைக் கணிப்பது கடினமாகவே உள்ளது என்று அவர் கூறினார்.

சுற்றுலாப் பயணிகள் யானைகளின் தும்பிக்கைகளைத் தொடுவதையும், புகைப்படம் எடுப்பதற்காக அருகில் நிற்பதையும், யானைகளைக் குளிப்பாட்டுவதையும், அவற்றுக்கு உணவளிப்பதையும் தடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சுற்றுலாப் பயணிகள் எல்லா நேரங்களிலும் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரிப்பதை உறுதிசெய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version