பீகாரின் சுபால் மாவட்டத்தில், வயல்வெளியில் சிக்கிய முதலையைத் தன் தோளில் சாக்கு மூட்டை போல் சுமந்து சென்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுபால் மாவட்டம் பீம்நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட லால்பூர் வார்டு 14 பகுதியில் உள்ள நெல் வயலில் திடீரென முதலை ஒன்று உலாவுவதைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். முதலில் பீதியடைந்த கிராம மக்கள், பின்னர் தைரியமாகச் செயல்பட்டு அந்த முதலையைக் கயிறு கட்டிப் பாதுகாப்பாகப் பிடித்தனர். மேலும், இதுகுறித்து பித்பூர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
https://x.com/Vishii14/status/2083436121439281479/video/1
வனத்துறையிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் வராததால், அந்த இளைஞர்கள் முதலையின் வாயைக் கயிற்றால் கட்டிப் பாதுகாப்பாக மூடினர். இதையடுத்து இளைஞர் ஒருவர், முதலையைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு நேராக பீம்நகர் காவல் நிலையத்திற்கே நடைபோட்டுச் சென்றார். இந்த விசித்திரக் காட்சி அங்கிருந்தவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலானது.
காவல் நிலைய பொறுப்பாளர் மணீஷ் குமார் இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் முதலையைக் கைப்பற்றி உடல் பரிசோதனை செய்தனர். அது முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டு, துறைசார் நடைமுறைகளுக்குப் பிறகு கோசி நதியில் அதன் இயற்கையான வாழிடத்தில் பாதுகாப்பாக விடப்பட்டது.
சுமார் 4 அடி நீளம் கொண்ட இந்த முதலை, பருவமழை காரணமாக ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வயல்வெளிக்கு வந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் இதுபோன்ற ஆபத்தான விலங்குகளைத் தாங்களே பிடிக்க முயற்சிக்காமல், உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும், எந்த விலங்குக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
