இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதல் காரணமாக 32 விமான நிலையங்களில் விதிக்கப்பட்ட சிவில் விமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) திங்கள்கிழமை அளித்த அறிவிப்பின் படி, இந்த 32 விமான நிலையங்கள் மீண்டும் சிவில் விமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம், “இந்த விமான நிலையங்கள் உடனடியாக சிவில் விமான போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. பயணிகள் விமானத்திட்டங்களை சரிபார்த்து, சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனத்தின் வலைதளங்களைப் பார்வையிட பரிந்துரைக்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி!!

மீண்டும் செயல்பட உள்ள விமான நிலையங்கள்: ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மார், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குல்லு மணாலி (பூந்தர்), லே, லுதியானா, முந்ரா, நாலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ், உத்தர்லாய் ஆகிய 32 விமான நிலையங்கள்.

கடந்த வாரம், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்த 32 விமான நிலையங்களில் சிவில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்தது. இது மே 9, 2025 முதல் மே 14, 2025 வரை (இந்திய நேரப்படி மே 15, 2025 அன்று காலை 05:29 வரை) அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: சேட்டிலைட் மூலம் பாக். பயங்கரவாதிகள் கண்காணிப்பு? செலவு இவ்வளவு கோடியா?

வழக்கம்போல் இயங்கும் டெல்லி சர்வதேச விமான நிலையம்: இதனிடையே, டெல்லி சர்வதேச விமான நிலையம் வழக்கம்போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) திங்கள்கிழமை (மே 12, 2025) வெளியிட்ட அறிவிப்பில், “விமான நிலைய செயல்பாடுகள் தற்போது சீராக இருக்கின்றன. இருப்பினும், மாறிவரும் வான்வெளி நிலைமைகள் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, சில விமான அட்டவணைகள் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடி செயலாக்க நேரங்கள் பாதிக்கப்படலாம்,” என்று கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாவதால், பயணிகள் கூடுதல் நேரத்தை அனுமதிக்க வேண்டும் என்றும், சீரான வசதிக்காக விமான நிறுவனம் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் DIAL அறிவுறுத்தியுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை (IGIA) DIAL இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version