இந்தியாவில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, ஈ20 பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் வகை மற்றும் பழமைக்கு ஏற்ப எரிபொருள் திறன் அதாவது மைலேஜ் 2 முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், டைனமோமீட்டர் மற்றும் சாலை சோதனைகளின்படி, ஈ20 எரிபொருளால் இன்ஜின்களில் எந்தவிதமான பழுதுகளோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த எரிபொருள் வாகனத்தின் முடுக்கத்தை அதிகரிப்பதோடு, சவாரி தரத்தையும் மேம்படுத்தும் என்றும், ஈ10 எரிபொருளுடன் ஒப்பிடும்போது இதன் கார்பன் உமிழ்வு 30 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) மற்றும் சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுபேக்சரர்ஸ் (SIAM) ஆகியவை இணைந்து பி.எஸ்-3, பி.எஸ்-4 மற்றும் பி.எஸ்-6 வாகனங்களில் ஈ20 பெட்ரோலின் தாக்கம் குறித்து கூட்டு ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இந்தியாவில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஈ15+ மற்றும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஈ19-ஈ20 எரிபொருள் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான கார்களும் இந்த எரிபொருளைப் பயன்படுத்தி வந்தாலும், இதுவரை இன்ஜின் பழுதடைந்ததாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான ஆதாரமும் இல்லை என அவர் தெரிவித்தார்.

ஈ20 எரிபொருளால் வாகனங்களின் ஆயுட்காலம் குறைவது அல்லது அரிப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் இல்லை என்பதை உற்பத்தியாளர்களின் சேவை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. அதனால்தான் வாகன நிறுவனங்கள் தொடர்ந்து வாரண்டி சேவைகளை வழங்கி வருவதாகவும், இது இதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு மேலும் உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பழைய வாகனங்களின் பாதுகாப்பு, எரிபொருள் திறன் குறைவு மற்றும் பராமரிப்பு செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் சில கவலைகளை எழுப்பி வருகின்றன. குறிப்பாக, 20 சதவீத எத்தனால் கலவைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள அரசு, இந்த எரிபொருள் மாற்றமானது அவசரமாக இல்லாமல், தேவையான உற்பத்தி திறன், உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்கிய பின்னரே படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் முறையான சோதனைகள் மற்றும் உற்பத்தியாளர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version