டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து இளைஞர் ஒருவர் பல மாதங்கள் நெருங்கிப் பழகி உடலுறவில் ஈடுபட்டார். ஆனால், தற்போது அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ளாமல் பிரிந்து சென்றுவிட்டார். எனவே, அவர்மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபு பக்ரு, “திருமணம் செய்வதாக உறுதி அளித்ததை அடிப்படையாக வைத்து நீண்டநாள் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்கொடுமைக் குற்றமாகக் கருதமுடியாது. இருவரும் நீண்ட காலமாக பரஸ்பர சம்மதத்துடன்தான் உறவு கொள்கின்றனர். அதன் பின்னர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மாதக் கணக்கில் ஒன்றாக வாழ்ந்து உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தால் அதன்பின்னர் பாலியல் வன்கொடுமைக் குற்றம் சுமத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தீர்ப்பளித்து, அந்தப் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் சுமதி கூறியதாவது, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ஒரு பெண்ணிடம் ஒரே ஒருமுறை உடலுறவு வைத்துக்கொண்டால் அதைப் பாலியல் வல்லுறவாகக் கருதலாம். ஆனால், `ஒருவன் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னதால் நான் அவனுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டேன். ஆனால், இப்போது அவன் என்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்கிறான்’ என்று சொன்னால் அது பாலியல் வல்லுறவில் வராது. ஏனென்றால் ஒவ்வொருமுறையும் அந்தப் பெண்ணுடைய சம்மதம் இருந்திருக்கிறது. அந்த ஆண் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அதற்காக இதற்கு முன்பு நடந்ததெல்லாம் அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமல் நடந்ததாகாது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.
திருமணத்துக்குப் பிறகுதான் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வரையறை வைத்திருக்கிறார்கள்… அந்த ஆண் அந்தப் பெண்ணுடன் வாழப்போகிறான். அவளுக்கு குழந்தை பிறந்தால் அதை அவன் பார்த்துக்கொள்ள வேண்டும். அவனுடைய சம்பாத்தியத்தில்தான் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பத்து பேர் முன்பு உறுதிப்படுத்துவதற்காகத்தான் திருமணம். அதிலும் பலர் ஏமாற்றுகிறார்கள் என்றுதான் திருமணப் பதிவை கட்டாயமாக்கினார்கள்.
ஆண்கள் பெண்களைத் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்ததால்தான் பெண்களை பாதுக்காப்பதற்கு சட்டம் பல வழிவகைகளை ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆனால், அவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. நான் திருமணமெல்லாம் செய்துகொள்ள மாட்டேன். லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன் என்றார்கள். சட்டம் அதையும் அங்கீகரித்துள்ளது. இப்படியான சூழலில், ஓர் ஆணும் பெண்ணும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல இருந்துவிட்டு, இருவருக்குள்ளும் சண்டை வந்த பிறகு, `இவன் என்னை ரேப் பண்ணிட்டான்’ என்று வந்து நின்றால் நீதிமன்றம் என்ன செய்யும்?
திருமணத்துக்கு முன்பு உடலுறவுக்குத் தயாராகிவிட்டால், அதற்கான ரிஸ்க்கை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அந்தப் பெண் மனநிலை சரியில்லாமல் இருந்தாலோ, அந்த ஆணோ, அவனை சார்ந்தவர்களோ போதைப்பொருளைக் கொடுத்து அந்தப் பெண்ணை முடிவெடுக்க முடியாத நிலையில் தள்ளி அந்தப் பெண்ணின் அனுமதியுடன் உடலுறவு கொண்டிருந்தாலோ அது வேறு… ஆனால், ஓர் ஆணுடனான உடலுறவுக்குப் பிறகு எப்படியெல்லாம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பது தெரிந்தும் ஒரு பெண் அந்த ஆணுக்கு உடலுறவுக்கு ஒப்புதல் அளித்தால் அதை எப்படி பாலியல் வல்லுறவுக்குள் கொண்டுவர முடியும்.
நம்பிக்கையின் அடிப்படையில் அனுமதி கொடுத்துவிட்டேன் என்று அந்தப் பெண் சொல்வாராயின், ஒருமுறை நம்பிக்கையின் அடிப்படையில் உடலுறவு வைத்துக்கொண்டேன் என்றால் சட்டம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், நம்பிக்கையின் அடிப்படையில் ஓர் ஆணுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டால் அதைப் பாலியல் வல்லுறவாகக் கருத முடியாது. அது தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இந்தத் தீர்ப்பு சரியானதுதான்” என்றார்.
