பாஜக ஆட்சி அமைக்கும்போது, மக்கள் 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சையைப் பெறுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசியவர், மேற்கு வங்கத்தில் நீண்ட காலமாக தென்பட்டு வரும் மாற்றத்தின் அலை என்பது நேற்றைய முதல் கட்ட வாக்குப்பதிவில் முத்திரையாக பதித்துள்ளது.
எங்கே திரிணாமுல் காங்கிரஸ் ஜனநாயக கோவிலை மிதித்ததோ, எங்கே, தனது கொடுங்கோன்மையால், அது ஜனநாயக கோவிலின் புனிதத்தை கெடுத்ததோ, அதே மேற்கு வங்கத்தில் முதல் கட்டத்திலேயே, மக்கள் ஜனநாயகக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பிவிட்டார்கள். இப்போது, இரண்டாம் கட்டத்தில், நீங்கள் இந்த ஜனநாயகக் கோவிலின் உச்சியில் வெற்றி கொடியை ஏற்ற வேண்டும்.
தற்போது, திரிணாமுல் காங்கிரஸ் முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. நேற்று இரவு முழுவதும், திரிணாமுல் காங்கிரஸ் தனது குண்டர்களைத் தைரியப்படுத்தி, தெருக்களில் இறங்குமாறு அவர்களைத் தூண்டியது. வங்காள மக்களிடமும், அனைத்து பா.ஜ.க தொண்டர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், இது புரட்சியின் பூமி, இது வீரர்களின் பூமி என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும், அணைவதற்கு முன் ஒரு மினுமினுக்கும் விளக்கு எப்படிச் சற்றுத் தவிக்கிறதோ, அதுபோலவே திரிணாமுல் காங்கிரஸ் எனும் விளக்கும், முழுமையாக அணைவதற்கு முன் சற்று தவிக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் குண்டர்கள் ஒளிந்துகொள்ள இடமேதும் இருக்காது, அவர்களைக் காப்பாற்றவும் எவரும் இருக்க மாட்டார்கள். நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்கு பதிவில் திரிணாமுல் கட்சியின் ‘மகா காட்டு தர்பாரின்’ முடிவை அறிவித்துள்ளது. அடிமைத்தனத்தின் தடைகளை உடைத்தெறிய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நாட்டு மக்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். “எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருவேன்.
இது வங்காளத்தில் ஒரு புதிய புரட்சியின் விடியல். இந்தப் புரட்சி உங்கள் ஒற்றை வாக்கால் நிகழ்த்தப்படும். ஆகவே, வங்காள மக்களிடம் நான் பணிவுடன் வேண்டுகிறேன், உங்கள் வாக்கின் ஆசீர்வாதத்தை எங்களுக்கு வழங்குங்கள், நாம் ஒன்றிணைந்து வங்காளத்தை அதன் பல இன்னல்களிலிருந்து விடுவிப்போம்.
TMC-யின் அச்சத்திலிருந்து விடுதலை, TMC-யின் ஊழலிலிருந்து விடுதலை, TMC-யின் சிண்டிகேட்டிலிருந்து விடுதலை, நம் மகள்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து விடுதலை, இடம்பெயர வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை, வேலை வாய்ப்பின்மையிலிருந்தும் விடுதலை, ஊடுருவல்காரர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை. மேற்கு வங்கத்தின் பெருமையை மீட்டெடுக்கவும், மாநிலத்தை மீண்டும் ஒரு வாய்ப்புகளின் பூமியாக மாற்றவும், இந்தச் சுதந்திரம் முற்றிலும் இன்றியமையாதது.
திரிணாமுல் காங்கிரஸ் ஒரு பெண்கள் விரோதக் கட்சி. பாஜகவோ பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாதிரியில் செயல்படுகிறது. தாய் ஒருவர் தன் மகளை மருத்துவராக ஆக்கினார். அந்த மகளை திரிணாமுல் காங்கிரஸ் அவரிடமிருந்து பறித்துவிட்டது. நாங்கள் அந்தத் தாயை வேட்பாளராக ஆக்கியுள்ளோம்.
சந்தேஷ்காலியால் பாதிக்கப்பட்டவருக்கும் பா.ஜ.க தலைமை தாங்க வாய்ப்பளித்துள்ளது. வங்காளப் பெண்கள் நீதி கேட்கும்போது, திரிணாமுல் காங்கிரஸ் அவர்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சொல்கிறது. பெண்கள் 21ம் நூற்றாண்டு மேற்கு வங்கத்திற்கு ஒரு புதிய காவியத்தை எழுதத் தயாராக இருப்பதை நான் காண்கிறேன். மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் “இனிமேல் இதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்; TMC அரசாங்கத்தை மாற்றியமைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று பிரகடனப்படுத்துகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு மகளுக்கும் நான் உறுதியளிக்க வந்துள்ளேன். அவர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை பாஜக அனுமதிக்காது. மே 4ம் தேதி பா.ஜ.க அரசு அமைந்த பிறகு, ஒவ்வொரு அநீதி மற்றும் ஒவ்வொரு அட்டூழியம் தொடர்பான கோப்புகளும் மீண்டும் திறக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்.
வங்காளத்தில் ஆயுஷ்மான் யோஜனா திட்டம் தற்போது செயல்பாட்டில் இல்லை. பாஜக ஆட்சி அமைக்கும்போது, மக்கள் 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சையைப் பெறுவார்கள். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முடிவு, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே எடுக்கப்படும். இடைத்தரகர்கள் எவரும் உங்கள் பணத்தை அபகரிக்க முடியாத வகையில், நேரடிப் பயன் பரிமாற்ற முறையின் அடிப்படையில் பாஜக செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
