உலகில் வளர்ச்சி அடைந்த நாடாக நமது நாட்டை மாற்றுவதற்கு இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று (மே 26) நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உலகளவில் உற்பத்தி துறையில் இந்தியா முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு உள்கட்டடைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
2014ல் இதே நாளில் (மே 26) முதன்முறையாக பிரதமராக பதவியேற்றதை குறிப்பிட்ட மோடி, குஜராத் மக்கள் முதலில் தன்னை ஆசிர்வதித்ததாகவும், பின்னர், கோடிக்கணக்கான இந்திய மக்கள் தன்னை ஆசிர்வதித்து வருவதாகவும் தெரிவித்தார்,
இந்திய உற்பத்தி பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, முக்கிய பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்று தெரிவித்த பிரதமர், தன்னை எதிர்கொள்வது எப்படி என்பதை பயங்கரவாதிகள் கற்பனை செய்தும் பார்த்திருக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார். பஹல்காம் சம்பவத்தில் நாட்டு மக்கள் என்ன விரும்பினார்களோ அதையே தான் செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், குஜராத்தில் ரயில்வே நெட்வொர்க்கின் 100 சதவீத மின்மயமாக்கல் நிறைவடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.