என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும் என்று SIR குறித்து மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளினால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்தால் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதேபோல், மேற்கு வங்காளத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட பலரும் இறக்க நேரிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்தநிலையில், இந்நிலையில் எஸ்ஐஆர் பணிகளை நிறுத்தக்கோரி மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் SIR எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. அதில் பேசிய மம்தா, “பாஜக SIR ஐ வைத்து குறித்து மத அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால் SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள். எனவே நீங்கள் அமர்ந்திருக்கும் கிளையையே (இந்துக்கள்) வெட்ட வேண்டாம்.
நான் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமை பதிவேட்டை (NRC), மக்களை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன், என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும்.
மேலும் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு எனது பொறுப்பு என்றும் உறுதியளிக்கிறேன்.
சில விஷமிகள், மாநில அரசு மத வழிபாட்டுத் தலங்களை மசூதிகள் அல்லது கல்லறைகளாகப் பதிவு செய்ததாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது ஒரு பொய். ஏஐ தொழில்நுட்பம் இப்போது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் ஒருபோதும் கூறாத அறிக்கைகளைப் பரப்ப என் முகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
நான் இன்னும் SIR படிவத்தை பூர்த்தி செய்யவில்லை. உங்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்ட பின்னரே நான் அதை செய்வேன். உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உதவி முகாம்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
