மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி  வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மக்களிடையே கவலை எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போரினால், உலகின் முக்கிய எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் வருவது தடைபட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி (LNG) விநியோகஸ்தரான கத்தார், தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனால் எல்.பி.ஜி  மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்குத் 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் 25 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல்/டீசல் இருப்பு தற்போது உள்ளது.

இந்தியா தனது எரிசக்தி விநியோகத்தை பல நாடுகளிடமிருந்து பெற்று வருகிறது. தற்போது ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வராத மாற்று வழித்தடங்கள் மூலம் எரிபொருளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40% மட்டுமே அந்த ஜலசந்தி வழியாக வருகிறது, மீதமுள்ள 60% பாதுகாப்பான பிற வழிகளில் வருகிறது.

சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தைப் பொறுத்தவரை, அடுத்த 3 வாரங்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், எல்.என்.ஜி (LNG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தடையால், தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தில் 10% முதல் 30% வரை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை விற்பனை செய்ய ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செய்யப் பிற நாடுகளையும் ஆராய்ந்து வருகிறது. அண்மையில், ஐக்கிய அரபு அமீரகம்  மற்றும் அமெரிக்காவுடன் புதிய எரிசக்தி ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நாளொன்றுக்கு மொத்தம் 195 MMSCMD (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர்) எரிவாயுவை இறக்குமதி செய்கிறது; இதில் கத்தார் நாடு 60 MMSCMD அளவை மட்டுமே வழங்குகிறது. எனவே, எரிவாயுவைப் பெற இந்தியா மற்ற சந்தைகளை ஆராய்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) கொள்முதல் செய்வது குறித்து உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், சர்வதேச எரிசக்தி முகமை (IEA) மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்புடன் (OPEC) இந்தியா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. போர்ச் சூழலில் எரிபொருள் ஏற்றி வரும் கப்பல்களுக்கான காப்பீட்டைப் பெறுவது குறித்து அமெரிக்காவுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிபிசி (BBC) அறிக்கையின்படி, கடந்த ஜனவரி மாதம் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் பேசுகையில், “ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள நிலத்தடி குகைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்பு வசதிகளில் இந்தியாவின் 74 நாள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு போதுமான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது” என்று தெரிவித்தார். அதே சமயம், கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்களுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்ததாக ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா தனது எல்.என்.ஜி (LNG) தேவையில் 40 சதவீதத்தை, அதாவது சுமார் 27 மில்லியன் டன்களை கத்தார் நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. மத்திய அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, “பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்திலும், சுத்திகரிப்பில் நான்காவது இடத்திலும், ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. மேலும், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியிலும், கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்ட முக்கிய பெட்ரோலியப் பொருட்களின் போதுமான இருப்பை இந்தியா பராமரித்து வருகிறது.”

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version