சினிமாக்களில் அரசாங்க நிலம், மெரினா கடற்கரை என பொது சொத்தை, தனி நபருக்கு ஏமாற்றி விற்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவது உண்டு. இந்த நிகழ்வு பஞ்சாப்பில் நிஜமாகவே நடந்துள்ளது. விமானப்படை ஓடுதளத்தை விற்பனை செய்து மாட்டிக் கொண்டுள்ளனர் தாய்-மகன்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே பட்டுவல்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே தான் பாகிஸ்தான் எல்லை உள்ளது. இங்கு ஒரு விமானப்படை ஓடுதளம் உள்ளது. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இந்த ஓடுதளம், 1962, 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் நிகழ்ந்த போர்களின் போது பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

இந்த இடத்தை, பஞ்சாப்பை சேர்ந்த உஷால் அன்சால் என்ற பெண்ணும், அவரது மகனான நவீன் சந்த் ஆகியோரும் விலை பேசி விற்றுள்ளனர். முன்னாள் வருவாய்த்துறை அதிகாரி நிஷான் சிங் என்பவர் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதுதொடர்பான வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தப் போது, விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாநில ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த அறிக்கையில், 1997ல் போலி பத்திரங்கள் மூலம் உஷா அன்சால், நவீன் சந்த் இருவரும் வருவாய்துறை அதிகாரிகள் உதவியுடன் ஓடுதளத்தை விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவர் மீது ஜூன் 28ம் தேதி எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. மேலும், டி.எஸ்.பி., கரண் சர்மா தலைமையில் முழு விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version