தேசிய நெடுஞ்சாலைகளில் பயண நேரத்தைக் குறைக்கவும், வாகன நெரிசலைத் தவிர்க்கவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த ரொக்கப்பணம் பெறுவது முற்றிலும் நிறுத்தப்படுகிறது. இதுவரை கட்டண விலக்கு கோரி அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்துச் செல்வது வழக்கமாக இருந்தது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

புதிய விதிகளின்படி, கட்டண விலக்கு பிரிவில் வருபவர்கள் இனி தங்களது அடையாள அட்டைகளைச் சுங்கச்சாவடிகளில் காட்ட முடியாது. அதற்குப் பதிலாக, ‘விலக்கு அளிக்கப்பட்ட பாஸ்டேக்’ (Exempted FASTag) அட்டையை அதிகாரப்பூர்வமாகப் பெற வேண்டும் அல்லது ஆண்டு சந்தா அட்டையை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்களுக்கான ஆண்டு சந்தா கட்டணமாக ரூ3,075 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ஒரு ஆண்டில் 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும். “கட்டண விலக்கு என்பது குறிப்பிட்ட பதவிக்கானதே தவிர, தனிநபரின் சொந்தப் பயன்பாட்டிற்கானது அல்ல” என்பதைத் தெளிவுபடுத்தவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வாகனங்களில் முறையான பாஸ்டேக் அட்டை இல்லையென்றால், யூபிஐ (UPI) மூலம் கட்டணத்தைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வாறு செலுத்தும்போது சாதாரண கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒருவேளை யூபிஐ மூலமும் பணம் செலுத்த மறுத்தால், அந்த வாகனம் நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் அல்லது அங்கிருந்து அகற்றப்படும். மேலும், செலுத்தப்படாத கட்டணத்திற்காக மின்னணு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 3 நாட்களுக்குள் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version