மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் எண்ணெய் விலை விண்ணைத் முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவிற்குத் தேவையான கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை தங்குதடையின்றி வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா வந்துள்ள ரஷ்யத் துணைப் பிரதமர் டெனிஸ் மான்ட்ரூவ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்காவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அடுத்த இரு வாரங்களுக்குப் போர் தீவிரமடைய வாய்ப்புள்ள சூழலில், இந்திய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யாவுடனான இந்த உறவு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, சிவில் அணுசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், உர ஏற்றுமதியை ஏற்கனவே 40 சதவீதம் அதிகரித்திருப்பதைப் போல மற்ற துறைகளிலும் விநியோகத்தை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ரஷ்ய நிறுவனங்கள் இந்தியச் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முழுத் தயார் நிலையில் இருப்பதாக மான்ட்ரூவ் உறுதி அளித்துள்ளார்.

எண்ணெய் விலை உயர்வால் இந்தியப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மாற்று வழிகளை ஆராய்ந்து வரும் மத்திய அரசுக்கு ரஷ்யாவின் இந்த ஆதரவு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. கச்சா எண்ணெய் மட்டுமின்றி, திரவ வடிவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தையும் அதிகரிக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போர்ச் சூழலிலும் இந்தியாவின் எரிசக்தித் தேவை தடையின்றி பூர்த்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இந்த உயர்மட்டச் சந்திப்பில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கலந்துகொண்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான முக்கிய முடிவுகளை ஆலோசித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version