இணையதளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அகற்றுவது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனது அந்தரங்க வீடியோக்களை இணையதளங்களில் இருந்து அகற்றக் கோரி ஒரு பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோக்களும் புகைப்படங்களும் ஆறு இணையதளங்களில் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பாலியல் வன்கொடுமை, போக்சோ வழக்குகள் மட்டுமல்லாமல், அனைத்து பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் முதல் தகவல் அறிக்கை (FIR) உள்ளிட்ட வழக்கு ஆவணங்களில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, இணையவழித் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள், தங்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எளிதாக நீக்குவதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்தத் தகவலைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version