மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்களின் இறக்கைகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டநிலையில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு விமானங்களின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டன. புறப்படுவதற்காகத் தயாராகிக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் AI 2732 (மும்பை முதல் கோயம்புத்தூர் வரை) பின்னோக்கி நகர்ந்தபோதும், தரையிறங்கிய பிறகு ஓடுபாதையை நோக்கி மெதுவாக வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் 6E 791 (ஹைதராபாத் முதல் மும்பை வரை) ஆகிய இரண்டு விமானங்களின் இறக்கைகளும் உரசிக்கொண்டன.
இந்த மோதலைத் தொடர்ந்து, இரண்டு விமானங்களும் ஆய்வுக்காகத் தரையிறக்கப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து அறிந்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை தொடங்கினர்.
மும்பையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 2732, புறப்படுவதற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது மற்றொரு விமான நிறுவனத்தின் விமானத்தின் மீது மோதியதால் தாமதமானது என்று ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இரண்டு விமானங்களின் இறக்கைகளின் முனைகள் மோதிக்கொண்டதாகவும், இதனால் தங்கள் விமானத்தின் இறக்கையில் சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேலதிக விசாரணைக்காக அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், அவர்கள் விரைவில் தங்கள் இலக்குகளுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
