நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 9) பெரும் பரபரப்புகளுக்கு இடையே தொடங்குகிறது. இந்த அமர்வில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, 118 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் இன்று முறையாகத் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது ஓம் பிர்லா அவையை நடத்த மாட்டார் என்பதால், இன்றைய நிகழ்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னதாக 1954-ல் ஜி.வி. மாவலங்கார், 1966-ல் ஹூகம் சிங் மற்றும் 1987-ல் பல்ராம் ஜாக்கர் ஆகியோருக்கு எதிராக இத்தகைய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இருப்பினும், முந்தைய மூன்று நிகழ்வுகளிலும் தீர்மானங்கள் தோல்வியடைந்து சபாநாயகர்கள் தங்களது பதவியைத் தக்கவைத்துக்கொண்டனர். தற்போது ஓம் பிர்லாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானமும், ஆளும் பாஜக கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மை பலத்தினால் முறியடிக்கப்படும் என்றே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
இந்தத் தீர்மானத்தை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களது எம்.பி.க்களுக்கு ‘திரீ-லைன் விப்’ (Three-line whip) எனப்படும் கட்டாய உத்தரவை பிறப்பித்துள்ளன. இதன்படி, இன்றும் நாளையும் (மார்ச் 9, 10) அனைத்து எம்.பி.க்களும் அவையில் தவறாமல் சமூகமளிக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் கட்ட அமர்வில் நிலவிய கடும் அமளி மற்றும் எம்.பி.க்கள் இடைநீக்கம் ஆகிய சம்பவங்களின் தொடர்ச்சியாக இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது. சபாநாயகர் பதவி நீக்க தீர்மானம் ஒருபுறமிருக்க, மறுபுறம் மேற்கு ஆசியப் போர்ச் சூழல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
