பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18, 2026) இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், பிரதமரின் இந்த உரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்த சூழலில், அது குறித்துப் பிரதமர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு பிரதமர் உரையாற்றுவதால், அதில் முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்த நிலையில், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் உரையாற்றக்கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இன்று, பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்த எதிர்க்கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகள் ஒரு ‘பெரும் தவறை’ இழைத்துள்ளதாகவும், இதற்காக அவைப் பெரும் விலையைச் செலுத்த நேரிடும் என்றும் அவர் கூறினார். மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கக்கூடிய அந்த மசோதாவை முறியடித்ததற்காக, நாட்டின் பெண்கள் எதிர்க்கட்சிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
