மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த கையோடு, சிக்கிம் மாநிலத் தலைநகர் கேங்டாக்கிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சிக்கிமின் 50-வது மாநில தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கச் சென்ற பிரதமர், அங்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் கலாச்சார ஊர்வலம் (Roadshow) மேற்கொண்டார். பின்னர், அங்குள்ள இளம் நண்பர்களுடன் மைதானத்தில் கால்பந்து விளையாடினார். மேற்கு வங்கத்தில் கால்பந்து என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார உணர்வாகும். கடந்த 2021 தேர்தலின் போது மம்தா பானர்ஜியின் “கேலா ஹோபே” (ஆட்டம் ஆரம்பம்) என்ற முழக்கம் கால்பந்தை மையப்படுத்தியே அமைந்தது. அந்த வகையில், வங்காளத் தேர்தல் சமயத்தில் பிரதமரின் இந்த கால்பந்து விளையாட்டு, அரசியல் ரீதியாகவும் ஒரு முக்கியச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
https://x.com/narendramodi/status/2048971961653735629?
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாமச்சியில் 100 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை, தியோராலியில் சோவா ரிக்பா மருத்துவமனை மற்றும் சிக்கிம் பல்கலைக்கழகத்தின் நிரந்தர வளாகம் உள்ளிட்ட கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
மேலும், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் கலை, விளையாட்டு, சமூகப் பணி எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகளைச் சந்தித்து அவர்களின் பங்களிப்பைப் பாராட்டினார். இளைஞர்களுடனான இந்த விளையாட்டுத் தருணம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் எனப் பிரதமரின் சிக்கிம் வருகை அந்த மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
