நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-27ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80 சதவீதத்துக்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

உத்தேச வினாக்கள் தொகுப்பு என்ற பெயரில் கைகளால் எழுதப்பட்ட 410 வினாக்கள் கொண்ட ஆவணம் நீட் தேர்வுக்கு 15 முதல் 30 நாள்களுக்கு முன்பாகவே மாணவர்களிடம் பரவியதாகவும், தேர்வுக்கு 42 மணி நேரம் முன்பாக வாட்ஸ்-அப் மூலம் ராஜஸ்தான் மற்றும் பிற வட மாநிலங்களில் மின்னல் வேகத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது. அதில் உள்ள வினாக்களை மட்டும் படித்திருந்தால் நீட் தேர்வில் 720-க்கு குறைந்தது 600 மதிப்பெண்களை எடுக்க முடியும் என்று கூறியுள்ள ராஜஸ்தான் காவல்துறை, இது தொடர்பாக 13 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இருப்பினும், மருத்துவம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயத்தில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதாக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தேசிய தேர்வு முகமை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது. நீட் தேர்வை மீண்டும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு மீண்டும் வேறு தேதியில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version