டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார்.

அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாணவர்கள் நியாயமான மற்றும் பொறுப்புணர்வுள்ள கல்வி முறையை வலியுறுத்தி அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, பாதுகாப்புப் படையினர் அதிகப்படியான பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள், உயிருக்கு ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் பெல்லட் கன் பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெண் மாணவிகள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் மற்றும் ஊடகச் செய்திகளை மேற்கோள்காட்டிய ராகுல் காந்தி, 19 வயதான மாணவர் சாஹில் லோச்சப் என்பவரை நேரில் சந்தித்ததாகவும், பெல்லட் கன் தாக்குதலால் அவர் ஒரு கண்ணின் பார்வையை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். போராட்டத்தை ஒடுக்க உயிருக்கு ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமித் ஷாவிடம் இரண்டு முக்கிய கேள்விகளையும் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். மாணவர்கள் மீது பெல்லட் கன் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி அளித்தது உள்துறை அமைச்சரா? இல்லையெனில், அந்த உத்தரவை பிறப்பித்தது யார்? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

அதேபோல், சீருடை அணியாமல் கையில் லத்தியுடன் மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படும் நபர்கள் காவல்துறையினரா அல்லது வேறு யாரா? அவர்களை பணியில் ஈடுபடுத்திய அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதற்கும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கடிதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதையும் வெளியிடவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version