மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மருந்து தயாரிப்பு துறைக்காக 10000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதன் மூலமாக பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும்.
செமி கண்டக்டர் துறைக்காக 40,000 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் அரிய வகை கனிமங்களை எடுப்பதற்கான மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டை போலவே ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அமைக்கப்படும். உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இயந்திரங்கள் தயாரிப்புக்க 10,000 கோடி ஒதுக்கீடு. சுரங்கங்கள் மெட்ரோ வழித்தடங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் புதிய திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர், இந்தியாவின் பாரம்பரிய கைவினைத் துறைக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தார். காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை வலுப்படுத்தும் நோக்கில் ஜவுளித்துறையில் மகாத்மா காந்தி கிராம சுராஜ் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராமப்புற கைவினை கலைஞர்கள், கைத்தறி நெசவாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முன்னதாக, 100 நாள் வேலை திட்டத்தில் (MGNREGA) மகாத்மா காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியதால் சர்ச்சை வெடித்த நிலையில், தற்போது அவரது பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர், முன்மொழியப்பட்ட பூங்காக்களுக்கான “சவால் முறையிலான” (challenge mode) தேர்வு நடைமுறை மூலம் நெசவுத் (textile) துறையின் முழுமையான சூழலமைப்பில் வளர்ச்சியை வேகப்படுத்த அரசு நோக்கம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் ஐந்து முக்கிய பகுதிகள் அடங்கியுள்ளன; இவை ஒவ்வொன்றும் உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதில் தேசிய நார் திட்டம் (National Fibre Scheme), நெசவுத் துறை விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் (Textile Expansion and Employment Scheme), தேசிய கைநெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் திட்டம் (National Handloom and Handicraft Programme), Text-ECON முயற்சி (Text-ECON initiative), SAMARTH 2.0 ஆகியவை அடங்கும்.
இந்த திட்டங்களை விரிவாக விளக்கிய அவர், “ஐந்து துணை கூறுகளை கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை நான் முன்மொழிகிறேன். முதலாவது, தேசிய நார் திட்டம் (National Fibre Scheme) — பட்டு, கம்பளி, சணல் போன்ற இயற்கை நார்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட நார்கள் (man-made fibres) மற்றும் புதிய தலைமுறை நார்கள் ஆகியவற்றில் தன்னிறைவை அடைவதற்காக.
இரண்டாவது, நெசவுத் துறை விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் (Textile Expansion and Employment Scheme) — பாரம்பரிய நெசவு குழுமங்களை (traditional clusters) நவீனமயமாக்க, இயந்திரங்கள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பொது சோதனை-சான்றிதழ் மையங்களுக்கு மூலதன ஆதரவு வழங்குவதற்காக.
மூன்றாவது, தேசிய கைநெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் திட்டம் (National Handloom and Handicraft Programme) — ஏற்கனவே உள்ள திட்டங்களை ஒருங்கிணைத்து வலுப்படுத்தவும், நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு குறிவைத்த ஆதரவை உறுதி செய்யவும்,” என்று அவர் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது, “நான்காவது, Text-ECON முயற்சி (Text-ECON initiative) — உலகளாவிய போட்டித்திறன் கொண்டதும் சுற்றுச்சூழலுக்கு நிலைத்ததுமான (sustainable) நெசவுத் துணிகள் மற்றும் ஆடை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக.
ஐந்தாவது, SAMARTH 2.0 — தொழில் துறையும் கல்வி நிறுவனங்களும் இணைந்து, நெசவுத் துறையின் திறன் மேம்பாட்டு (skilling) சூழலமைப்பை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும்.
மேலும், சவால் முறையில் (challenge mode) மேகா நெசவுப் பூங்காக்களை அமைக்கவும் நான் முன்மொழிகிறேன். இவை தொழில்நுட்ப நெசவுத் துணிகளில் (technical textiles) மதிப்பு கூட்டலை (value addition) உருவாக்குவதிலும் கவனம் செலுத்தலாம்.
கைநெசவு மற்றும் கைவினைப் பொருட்களை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் முயற்சியையும் தொடங்க முன்வைக்கிறேன். இது உலக சந்தைகளுடன் இணைப்பையும் (global market linkages) பிராண்டிங் செயல்பாடுகளையும் மேம்படுத்த உதவும். மேலும், உற்பத்தியில் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் தரச் செயல்முறைகளை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்தி ஆதரிக்கும்.
இந்த நடவடிக்கைகள் நமது நெசவாளர்கள், கிராமத் தொழில்கள், ஒரு மாவட்டம் – ஒரு தயாரிப்பு (ODOP) முயற்சி மற்றும் கிராமப்புற இளைஞர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் என்றார்.
மேலும், சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகம். புதிய திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு. தரம் மிகுந்த விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கப்படும். மூலதன செலவு ஒதுக்கீடு 12.2 லட்சம் கோடியாக உயர்வு. நீர்வழி முனையங்களை அமைப்பதற்கான புதிய திட்டம் அறிவிப்பு. நீர்வழி மூலமாக முக்கிய துறைமுகங்களை இணைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். சுற்றுலாத்துறைக்காக கடல் வழி விமான சேவைக்கும் நிதி ஒதுக்கீடு. கடலோர போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
