நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தொடரையொட்டி நாளை (28ம் தேதி) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் MGNREGA உள்ளிட்ட பிரச்சனைகளை நாளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
