தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றும், நேரில் ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது, மேலும் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையம் விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அந்தவகையில், அசாம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சாந்து மற்றும் விவேக் ஜோஷி தலைமையிலான குழு இன்று முதல் பிப்.18ம் தேதி வரை பயணம் செய்கிறது.
இவர்கள் மாநில தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவர். இவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்த மாதம் இறுதியில் வருவர் எனத் தெரிகிறது. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இவர்களது பயணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மேலும், தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகிறது. இந்தநிலையில், நேற்றைய டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு தேர்தல் ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதனையும் தனது பிரச்சார கருவியாக மாற்றிய தேர்தல் ஆணையம், ஒரு போட்டியில் ஒவ்வொரு ரன்னும் எப்படி முக்கியமோ, அதுபோல ஜனநாயத்தில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என குறிப்பிட்டு படிவம் 6-ஐ நிரப்பி வாக்காளராக பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
