சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) கீழ் 4 மாநிலங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன, வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான voters.eci.gov.in இல் இந்த பட்டியலை பார்க்கலாம். இந்தப் பட்டியலை ஆணையத்தின் ECINET செயலியிலும் காணலாம், இதை கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இன்று மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி, மற்றும் லட்சத்தீவுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இந்த வரைவு பட்டியலில், மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 58 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீக்கப்பட்ட பெயர்களின் மொத்த எண்ணிக்கை 58,20,898 ஆகும்.
பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களாக தேர்தல் ஆணையம் சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இறந்ததாக அடையாளம் காணப்பட்ட சுமார் 24.16 லட்சம் வாக்காளர்கள், இடம் பெயர்ந்த 19.88 லட்சம் வாக்காளர்கள், மற்றும் அடையாளம் காணப்படாத/காணாமல் போன 12.20 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 1.38 லட்சம் பெயர்கள் போலி வாக்காளர்கள் என்று அடையாளம் காணப்பட்டு வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், புதுச்சேரியில் 1 லட்சத்து 3 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 20.04% ஆகும். இந்த நீக்கங்களுக்குப் பிறகு, தற்போது புதுச்சேரியில் 7.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தகுதியுள்ள வாக்காளர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால், ஜனவரி 15 வரை பட்டியலில் சேர்க்கக் கோரி விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும்.
