மராட்டிய மாநிலம் பரமாதியில் தரையிறங்கிய போது அஜித் பவாரின் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட அஜித் பவார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அஜித் பவாருடன் பயணித்தவர்கள் யார்? வெளியான விவரம்: அஜித் பவாருடன் விதிப் யாதவ், பிங்கி மாலி மற்றும் விமானிகள் சுமித் கபூர், சம்பவி பதக் ஆகியோர் அகால மரணமடைந்தனர். அவர்களது உடல்கள் பாராமதியில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், அஜித் பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதனை சரிபார்த்த பிறகே, என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது தெரியவரும். இந்த கருப்புப்பெட்டியில் விமானத்தின் வேகம், எரிபொருள் உள்பட சுமார் 80 டெக்னிக்கல் விவரங்களில் தொடங்கி, விமான காக்பிட்டில் கேட்கும் சத்தம் முதல் கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தல்கள் வரை அனைத்தும் பதிவாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
