இந்தியா வர வேண்டிய ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல், பணப் பரிமாற்றச் சிக்கல் காரணமாக பாதியிலேயே திசை மாறி சீனாவுக்குச் சென்றதாக வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் எந்தவிதமான பணப் பரிமாற்றச் சிக்கல்களையும் எதிர்கொள்ளவில்லை. சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ளாமல் இத்தகைய தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. கப்பல்கள் பயணத்தின் போது தங்களின் செயல்பாட்டு சுதந்திரத்தின் அடிப்படையில் இலக்குகளை மாற்றுவது இயல்பானது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘பிங் ஷுன்’ (Ping Shun) என்ற அஃப்ராமக்ஸ் வகை டேங்கர் கப்பல் குஜராத்தின் வாடினார் துறைமுகத்திற்கு வருவதற்குப் பதிலாக, சீனாவின் டோங்யிங் நோக்கிச் சென்றதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனமான ‘கேப்லர்’ (Kapler) தெரிவித்திருந்தது. அமெரிக்கத் தடைகள் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயை வாங்குவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. இந்தச் சூழலில், பணப் பரிமாற்ற நிபந்தனைகளே கப்பல் திசை மாறக் காரணம் எனச் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால், “அடுத்த சில மாதங்களுக்கான இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது” என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், எல்பிஜி (LPG) எரிவாயு விநியோகம் குறித்த வதந்திகளுக்கும் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ‘சீ பேர்ட்’ (Sea Bird) என்ற கப்பல் சுமார் 44,000 மெட்ரிக் டன் ஈரானிய எரிவாயுவுடன் ஏப்ரல் 2-ம் தேதி மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், தற்போது அங்கு எரிவாயு இறக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் ஆதரவு பெற்ற நயாரா எனர்ஜி போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் எண்ணெய் கொள்முதல் குறித்து முடிவெடுக்கும் என்றும், இதில் நிதிச் சிக்கல்கள் ஏதுமில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
