சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே எதிரணிகளுக்கு ஒருவித அச்சம் இருக்கும். ஆனால், தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 19-வது ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அந்தப் போட்டியைத் தக்கவைக்க முடியவில்லை. 209 ரன்களைப் பஞ்சாப் அணி எளிதாக எட்டியது, சிஎஸ்கே-வின் பந்துவீச்சு பலவீனத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. இது வெறும் ஒரு போட்டித் தோல்வி மட்டுமல்ல, தனது சொந்த மண்ணில் சென்னை அணி சந்தித்து வரும் ஒரு மோசமான சரிவின் தொடர்ச்சியாகும்.
புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி, 2025-ம் ஆண்டிலிருந்து தடுமாறத் தொடங்கியுள்ளது. 2023-ல் விளையாடிய 8 போட்டிகளில் 5-ல் வென்ற சிஎஸ்கே, 2024-லும் அதேபோல 7 போட்டிகளில் 5 வெற்றிகளைக் குவித்தது. ஆனால், 2025-ம் ஆண்டு ஒரு பெரிய சறுக்கலைச் சந்தித்தது; அந்த ஆண்டு விளையாடிய 6 ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று, எஞ்சிய 5 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்தது. தற்போது 2026-ம் ஆண்டின் முதல் சேப்பாக்கம் போட்டியிலும் பஞ்சாப்பிடம் மண்டியிட்டதன் மூலம், தனது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே தொடர்ந்து 6-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
“எதிரிகளை மிரட்டிய சேப்பாக்கம் மைதானம், இப்போது அவர்களே வந்து கொண்டாடும் இடமாக மாறிவிட்டது” எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். ஆடுகளத்தின் தன்மை மாறியுள்ளதா அல்லது சென்னை அணியின் பந்துவீச்சு வியூகத்தில் குறைபாடுகள் உள்ளதா என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன. 2025-ல் தொடங்கிய இந்த மோசமான சாதனை 2026-லும் தொடர்வது அணி நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சரிந்து வரும் தனது ‘கோட்டை’யை மீட்கவும், ரசிகர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும் அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
