சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ம் வகுப்பு தேர்வை இனி மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்து இருந்தது.
இந்த நிலையில், மாணவர்களின் பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2026-27-ம் கல்வி ஆண்டு முதல் 9-ம் வகுப்புக்கு, இந்த முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுதலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், 2023ம் ஆண்டு முதல் சோதனை முறையில், பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளை, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புத்தகம் பார்த்து எழுதும் முறை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.